செய்திகள்
டெல்லி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முறைகளை பார்வையிட்ட மத்திய மந்திரி
டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
புதுடெல்லி:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ வர்தன் இன்று நேரில் சென்றார். அங்கு அளிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில், இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளின் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்தார்.