செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை - தென்கொரியா, உகாண்டா அதிபர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
புதுடெல்லி:
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் மற்றும் உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினேன். கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் முழு பலத்தை வழங்க ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.