செய்திகள்
ஏப்ரல் 5ம் தேதி விளக்கேற்றும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்- பிரதமர் மோடி
வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்கேற்றும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஒன்றுகூடி விளக்கேற்ற கூடாது என்றும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.
புதுடெல்லி:
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:-
ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.
வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் வகையில், வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். 9 நிமிடங்களுக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். அல்லது செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். விளக்கேற்றும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், ஒன்று கூடி விளக்கு ஏற்றக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.