செய்திகள்
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் தேர்ச்சி - குஜராத் அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக குஜராத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அகமதாபாத்:
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக குஜராத் மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1முதல் 9 ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, குஜராத் மாநிலம் முழுவதும் 144 தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.