செய்திகள்
கொரோனா தாக்கம் எதிரொலி- மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாளை மறுநாள் நடைபெறவிருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26-ம் தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், 37 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கு, தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. பேருந்து, ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.