செய்திகள்
நாராயணசாமி

நாராயணசாமி-நமச்சிவாயம் டெல்லி பயணம்

Published On 2020-02-28 02:55 GMT   |   Update On 2020-02-28 02:55 GMT
காங்கிரஸ் கட்சியின் மேலிட அழைப்பின்பேரில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
புதுடெல்லி:

புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேர்தல் அறிவிப்புகளை அமல்படுத்துவதற்கான குழுவின் கூட்டம் ஆகியன நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி, ராகவன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



அப்போது மத்திய அரசு, கவர்னர் கிரண்பேடி அளித்து வரும் தொல்லைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் அப்போது மேலிட தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது புதுவை மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளித்தனர். மேலும் தற்போது மத்திய அரசு, கவர்னரின் தலையீட்டால் நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்கள் குறித்தும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று கட்சி மேலிட அழைப்பின்பேரில் டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்கள் புதுவை அரசியல் சூழ்நிலை, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தகுதிநீக்க புகாருக்கு ஆளாகியுள்ள தனவேலு எம்.எல்.ஏ. மீது எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

மேலும் அவர்கள் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியினை சந்திக்க உள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.


Tags:    

Similar News