செய்திகள்
வைரஸ் பாதிப்பை தவிர்க்க முகமூடி அணிந்து செல்லும் மக்கள்

சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் - இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Published On 2020-01-25 12:26 GMT   |   Update On 2020-01-25 12:26 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியை தொடர்ந்து, இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால்  இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.  அவர்களில் 11 பேர் ஆண்கள்.  4 பேர் பெண்கள்.  

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியமற்ற சீனப்பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஐதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News