செய்திகள்
விஞ்ஞானி நம்பி நாராயணன்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு: கேரள அரசு முடிவு

Published On 2019-12-28 02:43 GMT   |   Update On 2019-12-28 04:06 GMT
உளவு வழக்கில் தவறாக கைது செய்யப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கூடுதலாக ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க கேரள மந்திரிசபை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் :

கடந்த 1994-ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் ‘இஸ்ரோ’ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த விவகாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

நம்பி நாராயணன் மீது தவறு இல்லை என்று கண்டறிந்து அவரை சி.பி.ஐ. விடுவித்தது. தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக, நஷ்ட ஈடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள மாநில அரசு வழங்கியது.

இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சப்-கோர்ட்டில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு கூடுதலாக ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க கேரள மந்திரிசபை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை சப்-கோர்ட்டில் தாக்கல் செய்து, கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
Tags:    

Similar News