செய்திகள்
டெல்லி தீ விபத்து - உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல்
டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன.
இதற்கிடையே, இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன. அதிகாலையில் நடந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தோருக்கு உரிய உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.