செய்திகள்
திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி சந்திப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இன்று சந்தித்தனர்.
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால், அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்ததால், அவர் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.
அத்துடன், அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்த சூழலில், இன்று காலை திகார் சிறை சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர்.