செய்திகள்
காற்று மாசு : டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்
காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
புதுடெல்லி:
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகரித்ததால் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்ணுள்ள வாகன போக்குவரத்து முறை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் ஓரளவுக்கு மாசுபாடு குறைந்தாலும் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சூழ்ந்த கரியமில வாயு கலந்த புகையினால் சிலநாட்களாக மீண்டும் காற்று மாசு அபாயகரமான உச்சக்கட்ட நிலையை எட்டியது.
அருகில் உள்ள அரியானா, பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நெல், கோதுமை பயிர்களின் அறுவடை முடிந்து ஏராளமான வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் தற்போது டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, காற்று மாசினால் சிறார்கள் பாதிக்கப்படாமல் இருக்க நவம்பர் 5ம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் சுப்ரீம் கோர்ட் அமைத்த சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் பொது சுகாதார அவசரநிலையை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, காற்று மாசு அபாய கட்டத்தை கடந்துவிட்டதால் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் மக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். மேலும், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.