செய்திகள்
ஒரு வழியாக 4ஜி சேவையில் பிஎஸ்என்எல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் தொடக்க காலத்தில் டெலிகாம் சந்தையில் கொடிகட்டி பறந்த அரசுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல். தற்போது ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் வருகையால் பிஎஸ்என்எல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு அதிவேக 4ஜி சேவை உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி இந்திய சந்தையில் கடுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தற்போதுவரை 4ஜி சேவைக்கான அலைக்கற்றைகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.
இதன் விளைவாக, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தனது பெரும்பாலான வாடிக்கையாளர்களை இழந்துள்ள பிஎஸ்என்எல் கடும் நிதி நெருக்கடியிலும் சிக்கித்தவித்து வருகிறது. மேலும், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாமலும் இருந்தது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் மூடுவிழா காணலாம் என அஞ்சப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை சேவை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனங்களை மறுசீரமைக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், 'அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் எண்ணம் கிடையாது. மாறாக இந்த இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றால் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்' என தெரிவித்தார்.