செய்திகள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா

வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தும் மோடி அரசு: தேவகவுடா

Published On 2019-10-11 12:32 GMT   |   Update On 2019-10-11 12:32 GMT
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு வருமான வரித்துறையை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது என இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
மைசூர்:

மோடி தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு, வருமான வரித்துறை அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அரசு துறைகளை தவறாக பயன்படுத்துகிறது என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின்  தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா  வீட்டில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் , பரமேஷ்வராவின் அப்பா சம்பாதித்தது ஆகும். அவரது அப்பா நிறுவிய பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை பரமேஷ்வரா நிர்வகித்து வருகிறார்.

அரசியலில் யாரும் 100 சதவீதம் நல்லவர்கள் அல்ல. பாஜக தலைவர்கள் ஊழலில் ஈடுபடாமல் உள்ளனரா? பிரதமர் மோடி சமூக ஊடகங்களையும் , ஒரு சில ஊடகவியலாளர்களின் ஆதரவையும் பயன்படுத்தி நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்.  வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அரசு துறைகளை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது.

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தை ஊடகங்களின் பார்வையில் இருந்து மறைப்பது வளர்ச்சியின் அடையாளம் அல்ல, இது குறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News