செய்திகள்
காஷ்மீர் பாஜக செயலாளர் கொலையில் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள் கைது
ஜம்முவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பாஜக மாநில செயலாளர் கொலை உள்பட 4 வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீரில் பாஜக கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்டவர் அனில் பாரிக்கர். அனில் மற்றும் அவரது சகோதரர் அஜீத் ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஜம்முவின் கிஸ்ட்வார் பகுதியில் உள்ள அவர்களது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.
இதேபோன்று கடந்த ஏபரல் மாதம் 9-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சந்தர்காந்த் சர்மா மற்றும் அவரது பாதுகாவலரும் கிஸ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் கிஸ்ட்வார் பகுதி உள்பட பல பகுதிகளில் இன்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது பாஜக மாநில செயலாளர் அனில் பாரிக்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சந்தர்காந்த் ஆகியோரது படுகொலை உள்பட 4 வழக்குகளில் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர்.