செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரத்தின் 10 கோடி ரூபாயை விடுவிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

Published On 2019-09-06 08:11 GMT   |   Update On 2019-09-06 08:11 GMT
வெளிநாடு செல்வதற்கு நிபந்தனையாக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த 10 கோடி ரூபாயை இப்போது விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
புதுடெல்லி:

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்று வருவதற்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனவை விசாரித்த நீதிமன்றம், வெளிநாடு செல்வதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்தது. அத்துடன், வைப்புத் தொகையாக 10 கோடி ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டது. அதன்படி கார்த்தி சிதம்பரம் 10 கோடி ரூபாயை உச்ச நீதிமன்ற கருவூலத்தில் டெபாசிட் செய்து இருந்தார்.



அந்த டெபாசிட் தொகையை தனக்கு திரும்ப தருமாறு கார்த்தி சிதம்பரம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா அதை ஏற்க மறுத்து விட்டார். அடுத்த 3 மாதங்களுக்கு அந்த 10 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட்டில் இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல் டெபாசிட் தொகையை விடுவிக்கும்படி கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News