செய்திகள்
வைரல் புகைப்படம்

குழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை

Published On 2019-08-23 06:02 GMT   |   Update On 2019-08-23 06:03 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளை கட்டி கார் டிக்கியில் அமர வைத்த குடும்பத்தார் தாக்குதலுக்கு ஆளான பின் வெளியான உண்மை விவரங்களை பார்ப்போம்.



மூன்று குழந்தைகள் கார் டிக்கியில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் பகிரப்படுகிறது.

வைரல் புகைப்படங்களில் குழந்தைகள் கட்டிவைக்கப்பட்ட நிலையில், கார் டிக்கியில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களை குழந்தை கடத்தல் கும்பல் கடத்தும் போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதே தகவல் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. உண்மையில் இச்சம்பவம் ஹரியானாவின் லத்வா பகுதியில் நடைபெற்றது. குழந்தை கடத்தல் கும்பல் என கூறப்பட்டவர்கள் ஹரித்வார் பகுதியில் இருந்து திரும்பி கொண்டிருக்கும் போது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. 



ஆறு மாதங்களுக்கு முன் சுரேந்திரா மற்றும் சுனில் குமார் என இரு சகோதரர்கள் அவர்களது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு ஹரித்வாரில் இருந்து திரும்பி கொண்டிருந்தனர். வரும் வழியில் சிற்றுண்டிக்காக லத்வா பகுதியில் வண்டியை நிறுத்தி கார் டிக்கியை இவர்கள் திறந்தனர்.

கார் டிக்கியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். இதை அங்கிருந்தவர்கள் பார்த்ததும், குழந்தை கடத்தல் என நினைத்துக் கொண்டு, குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தினர். பின் சம்பவ பகுதிக்கு விரைந்த காவல் துறையினர், அவர்களது கார் பதிவு எண், ஆதார் விவரங்களை ஆய்வு செய்து அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்தனர்.

காரில் இடமில்லாததால் குடும்பத்தார் குழந்தைகளை கார் டிக்கியில் அமர வைத்து, குழந்தைகள் விழாமல் இருக்க அவர்களை கட்டி வைத்ததாக தெரிவித்தனர். அந்த வகையில் வைரல் பதிவுகளின் படி பொது மக்கள் தாக்கியது குழந்தை கடத்தல் கும்பல் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு அசம்பாவிதங்கள், வீண் பதற்றமும் ஏற்படுகிறது. சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
Tags:    

Similar News