செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

Published On 2019-08-21 12:11 GMT   |   Update On 2019-08-21 12:11 GMT
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு, மத்திய நிதி மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்தார்.

இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார். இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.



ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்தது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனுக்கான மேல் முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News