செய்திகள்
சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள்

டெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு

Published On 2019-08-20 13:51 GMT   |   Update On 2019-08-20 13:51 GMT
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை நுழைந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு, மத்திய நிதி மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்தார்.

இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார். இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் இன்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். இதையடுத்து அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News