செய்திகள்
சசிகலா

இன்று பிறந்த நாள் கொண்டாடவில்லை: பெங்களூரு சிறையில் சசிகலா மவுன விரதம்

Published On 2019-08-18 12:23 GMT   |   Update On 2019-08-18 12:23 GMT
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா இன்று பிறந்த நாள் கொண்டாடவில்லை. அவர் சிறையில் மவுன விரதம் இருந்து வருகிறார்.

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சசிகலாவுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். அவர் பிறந்த நாளை கொண்டாட வில்லை. இன்று மவுன விரதம் இருந்து வருகிறார்.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான பெங்களூரு புகழேந்தி கூறியதாவது:-


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா பிறந்த நாளை கொண்டாடுவார். ஜெயலலிதா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று போயஸ் கார்டனில் உள்ளவர்களுக்கு மட்டும் இனிப்பு வழங்குவார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக அவர் பிறந்த நாள் கொண்டாடவில்லை.

இன்று அவரது பிறந்த நாள் என்றாலும் சிறையில் அவர் மவுன விரதம் இருந்து வருகிறார். யாரிடமும் இன்று பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். அவர் பிறந்த நாளை கொண்டாடா விட்டாலும் கர்நாடகத்தில் உள்ள தொண்டர்கள் நலத்திட்ட உதவி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து யார் விலகி சென்றாலும் என் நெஞ்சத்தில் வலி ஏற்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. இனிமேலும் யாரும் விலகிச் செல்ல வேண்டாம். வருகிற டிசம்பர் அல்லது பிப்ரவரி மாதம் சசிகலா சிறையை விட்டு வெளியே வந்து விடுவார். அந்த நேரத்தில் அவரை சந்தித்து விட்டு அதன் பிறகு என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News