செய்திகள்
கேரளாவில் கடும் நிலச்சரிவு- 15 பேர் பலி
கேரளா மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலபரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை.
திருவனந்தபுரம்:
கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலபரா பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.
மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 15 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு ராணுவ வீரர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 15 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளா மாநிலத்தில் இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.