செய்திகள்
கேரளாவில் கனமழை, வெள்ளத்துக்கு 22 பேர் பலி - நிலச்சரிவுகளால் மக்கள் அவதி
கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமான சேதத்தை எதிர்கொண்டுள்ள வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 30-க்கும் அதிகமானவர்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
உள்மாவட்டங்கலை இணைக்கும் பல முக்கிய சாலைகள் வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்ட நிலையில் வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, எர்னாகுளம் ஆகிய மாவட்டங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 315 தற்காலிக முகாம்களில் சுமார் 25 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் வரை கிடைத்த தகவலின்படி மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனதாக கருதப்படும் நபர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.