செய்திகள்
உடனடியாக பணிக்கு திரும்புங்கள் - அரசு ஊழியர்களுக்கு ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு பணியாளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பணிகளுக்கு திருப்பும்படி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீநகர்;
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதையடுத்து, அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு பணியாளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பணிகளுக்கு திரும்பும்படி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் தலைமை செயலகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள மண்டல, மாவட்ட அரசு பணியாளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பணிகளுக்கு திரும்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தங்கள் பணியை மேற்கொள்ள சுமூகமான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.