செய்திகள்
சிறப்பு அந்தஸ்து ரத்து நாட்டு நலனுக்கு அவசியமான ஒன்று: ஆர்எஸ்எஸ்
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது நாட்டு நலனுக்கு அவசியமான ஒன்று என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மும்பை:
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் அமளிக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அமித் ஷா அறிவித்தார்.
மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததற்கான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் டுவிட்டரில் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசின் மிகவும் துணிச்சலான நடவடிக்கை . இந்த நடவடிக்கையை நாங்கள் மனதார வரவேற்கிறோம், ஏனெனில் இது நாட்டிற்கு மட்டுமல்லாமல் ஜம்மு-காஷ்மீருக்கும் மிகவும் அவசியமான ஒன்று.
மேலும், அரசியல் கட்சியினர் அனைவரும் தங்கள் அரசியல் ரீதியிலான வேறுபாடுகளை களைந்து மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.