செய்திகள்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய ஆகஸ்ட் 9ம் தேதி வரை தடை நீட்டிப்பு
ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.