செய்திகள்
புஷ்ப பல்லக்கில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.

திருப்பதி ஏழுமலையானிடம் பழைய கணக்கை ஒப்படைத்து புதிய வரவு, செலவை தொடங்கினர்

Published On 2019-07-18 05:56 GMT   |   Update On 2019-07-18 05:56 GMT
திருப்பதி ஏழுமலையானிடம் பழைய வரவு, செலவு கணக்கை ஒப்படைத்து விட்டு புதிய வரவு, செலவு கணக்கை தொடங்கினர்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசல் முன்பு ஜண்டா மண்டபத்தில் ஆனிவார ஆஸ்தானம் நடந்தது. அங்கு சிறப்பு அலங்காரம் செய்து சர்வ பூபால வாகனத்தை வைத்தனர். அதில் உற்சவர்களான விஸ்வசேனர், ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை எழுந்தருள செய்தனர். மூலவர் வெங்கடாசலபதிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பெரியஜீயர் சாமிகள் சடகோப ராமானுஜர், சின்னஜீயர் சாமிகள் நாராயண ராமானுஜர் ஆகியோர் வெள்ளித்தட்டில் 6 பட்டு வஸ்திரங்களை வைத்து, தங்களின் தலையில் சுமந்தபடி மேளதாளம் முழங்க கோவில் பிரகாரத்தை வலம் வந்து மூலவர் வெங்கடாசலபதியிடம் சமர்ப்பணம் செய்தனர். அதில் 4 பட்டு வஸ்திரங்களை மூலவருக்கும், ஒரு பட்டு வஸ்திரம் உற்சவர் மலையப்பசாமிக்கும், மற்றொரு பட்டு வஸ்திரம் விஸ்வசேனருக்கும் அர்ச்சகர்கள் அணிவித்தனர்.

பெரியஜீயர் சாமிகள், சின்னஜீயர் சாமிகள், முதன்மை செயல் அலுவலர், பிரதான அர்ச்சகர் வேணுகோபாலதீட்சிதர் ஆகியோருக்கு சிறிய பட்டு வஸ்திரத்தால் தலையில் பரிவட்டம் கட்டப்பட்டது. அர்ச்சகர்கள் ஒரு வெள்ளித்தட்டில் சிறிதளவு மஞ்சள் அரிசியை பரப்பி நித்ய ஐஸ்வரியோ பவா எனக்கூறி பக்தர்களிடம் இருந்து காணிக்கையை மூலவர் பாத்திரத்தில் வைத்து, பிரதான உண்டியலில் செலுத்தி பழைய வரவு, செலவு கணக்கை முடித்து புதிய வரவு, செலவு கணக்கை தொடங்கினர்.

அடுத்ததாக ஜீயர் சாமிகள் மற்றும் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஆகியோரின் கைகளில் கோவிலின் சாவி கொத்தை கொடுத்தனர். அப்போது அதற்கு ஆரத்தி, சந்தனம், தீர்த்தம் சடாரி ஆகிய மரியாதைகள் செய்யப்பட்டது. சாவி கொத்தை வாங்கி மூலவரின் பாதத்தில் வைத்தனர். பின்னர் அந்த சாவி கொத்தை எடுத்து மூலவரின் கதவை மூடுவதும், திறப்பதுமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை புஷ்ப பல்லக்கு வீதி உலா நடந்தது. அது 22 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 10 ஆயிரம் கொய் மலர்கள் உள்பட 6 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

புஷ்ப பல்லக்கின் முன்பக்கத்தில் கருடன், ஆஞ்சநேயர் உருவமும், பின்பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உருவமும் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அத்துடன் ஆனி வார ஆஸ்தானம் முடிந்தது.
Tags:    

Similar News