செய்திகள்
முத்தலாக்

திருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்

Published On 2019-07-17 09:22 GMT   |   Update On 2019-07-17 09:22 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒருவர், திருமணமாகி 24 மணி நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ என கூறி மனைவியை விவாகத்து செய்துள்ளார்.
லக்னோ:

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.

மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆனது. இதனால் நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில், முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒருவர் முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.



உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஜகாங்கீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகே ஆலம். இவருக்கும் ருக்சானா பேகம் என்பவருக்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்துக்கு முன் வரதட்சணையாக பைக் ஒன்றை கேட்டுள்ளார்.

இதற்கு ஒப்புக் கொண்ட ருக்சானாவின் வீட்டாரால், பைக்கை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து திருமணமாகி 24 மணி நேரத்தில் ருக்சானாவுக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார்.

இதனால் ருக்சானவும், அவரது வீட்டாரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதனையடுத்து ருக்சானாவின் தந்தை, ஆலம் மற்றும் அவரது வீட்டார் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து விசாரித்து வருவதாகவும், விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News