செய்திகள்
அமர்நாத் பனிலிங்கம்

அமர்நாத் யாத்திரை: பனிலிங்கத்தை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

Published On 2019-07-16 16:59 GMT   |   Update On 2019-07-16 16:59 GMT
அமர்நாத் யாத்திரையில் பனிலிங்கத்தை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயத்தில் ஆண்டுதோறும் குகைக்குள் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

அவ்வகையில், இந்த ஆண்டின் யாத்திரை காலம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 46 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் யாத்திரை  முடிவடைகிறது.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரையில் 16-வது நாளான இன்று, 11 ஆயிரத்து 538 பேர் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News