செய்திகள்
கர்நாடகா - அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு
கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். அவர்கள் சட்டசபையில் எதிர்வரிசையில் இடம் ஒதுக்கக்கோரி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
இதனால் அரசின் பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் பா.ஜ.கவின் பலம் சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உயர்ந்துள்ளது.
16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதுதொடர்பாக 10 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும், வரும் 16-ம் தேதி வரை எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகிய 5 பேர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனுவும் நாளை மறுநாள் ஏற்கனவே 10 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவுடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.