செய்திகள்

ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உடல் கருகி பலி

Published On 2019-06-27 01:23 GMT   |   Update On 2019-06-27 01:23 GMT
ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கோவிலுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலம் லால்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாட்போ கிராமத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஜமூய் மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். யோகியா அஸ்தான் என்ற இடத்தின் அருகே சென்றபோது, எதிரே வந்த ஆட்டோவிற்கு வழிவிடுவதற்காக டிரைவர் சாலையோரமாக பஸ்சை திருப்பினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பஸ் உரசியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். 18 பேர் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின் இணைப்பை துண்டித்துவிட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு நவாடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் பலியானவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றொருவர் யார் என்பது பற்றி தகவல் இல்லை. இறந்தவர்களில் சஞ்சய் ராவ் (வயது 45), சவுரவ் குமார் (15) ஆகியோர் தந்தை, மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

கோவிலுக்கு வழிபட சென்றவர்கள் பலியான சம்பவத்தை அறிந்து, அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
Tags:    

Similar News