செய்திகள்

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி- 39 பேர் படுகாயம்

Published On 2019-06-25 04:06 GMT   |   Update On 2019-06-25 04:06 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
ராஞ்சி:

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா நகரம் நோக்கி பயணிகள் பேருந்து இன்று வந்துகொண்டிருந்தது. கர்வா பகுதியை நெருங்கியபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் இருந்து விலகி, ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து கடுமையாக சேதம் அடைந்தது. பேருந்தில் பயணித்தவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல் கடந்த 10-ம் தேதி பாட்னா நோக்கி சென்ற பேருந்து இரும்பு லோடு ஏற்றி சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News