செய்திகள்

புல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2019-06-16 11:28 GMT   |   Update On 2019-06-16 11:28 GMT
புல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக பாகிஸ்தான் தகவல் அளித்து உள்ளது. இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 பேர் பலியானார்கள். தற்கொலை படை பயங்கரவாதியும் பலியானான்.

இந்த நிலையில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக பாகிஸ்தான் தகவல் அளித்து உள்ளது.


காஷ்மீரின் டிரால் பகுதியில் கடந்த மாதம் 24-ந்தேதி ஜாகீர்முசா என்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் அல்கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதியான புர்கான் வானியின் நெருங்கிய கமாண்டர் ஆவான். புர்கானை ஏற்கனவே பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்று இருந்தனர்.

ஜாகீர்முசா கொலைக்கு பழிவாங்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். புல்வாமா மாவட்டம் அவந்திவோரா நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அந்நாடு இந்த தகவலை கொடுத்துள்ளது. இதே போல அமெரிக்காவும் புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியாவை எச்சரித்து உள்ளது.

பாகிஸ்தான், அமெரிக்கா கொடுத்த தகவல் அடிப்படையில் காஷ்மீர் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News