செய்திகள்
வெளிநாட்டவர் என சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் ஜாமீனில் விடுதலை
அசாம் மாநிலத்தில் வெளிநாட்டவர் என கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் முஹம்மது சனாவுல்லாவை கவுகாத்தி ஐகோர்ட் இன்று ஜாமீனில் விடுதலை செய்தது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் கம்ருப்(புறநகர்) மாவட்டத்தில் உள்ள போக்கோ பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சனாவுல்லா. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர் விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் அசாம் மாநில காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராகவும் இருந்தார்.
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பட்டியலின்படி முஹம்மது சனாவுல்லா வெளிநாட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
சட்டப்புறம்பாக இந்தியாவுக்குள் ஊடுருவிய நபர்களை அடைத்து வைக்கும் கோல்பாரா சிறையில் முஹம்மது சனாவுல்லாவும் அடைத்து வைக்கப்பட்டார்.
அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டுன் என கவுகாத்தி ஐகோர்ட்டில் சனாவுல்லாவின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது 20 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் அவரை விடுவிக்க நீதிபதி அனுமதியளித்தார்.