செய்திகள்

ஏ.டி.எம்.-இல் இருமுறை கேன்சல் க்ளிக் செய்தால் இப்படி நடக்குமா?

Published On 2019-06-04 07:28 GMT   |   Update On 2019-06-04 07:28 GMT
ஏ.டி.எம். இயந்திரத்தில் இரண்டு முறை கேன்சல் பட்டனை க்ளிக் செய்தால் உண்மையில் இப்படி நடக்குமா என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

 

ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள கேன்சல் (cancel) பட்டனை இருமுறை க்ளிக் செய்தால், மற்றவர்கள் உங்களது பின் நம்பரை திருட முடியாது என தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பரப்பப்படும் தகவல்களில் இந்திய ரிசர்வ் வங்கி மக்களிடம் ஏ.டி.எம். பயன்படுத்திய பிறகு இருமுறை கேன்சல் பட்டனை க்ளிக் செய்யக் கோருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பயனரின் ரகசிய குறியீட்டு எண் (பின்) மற்றவர்கள் திருட முடியாது என கூறப்படுகிறது. 



இதுகுறித்து பெயர் குறி்ப்பிட விரும்பாத ரிசர்வ் வங்கி அதிகாரி கூறும் போது, இவ்வாறு பரவும் தகவலில் உண்மையில்லை என தெளிவுப்படுத்தி இருக்கிறார். இது ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஏ.டி.எம். இயந்திரத்தில் பின் நம்பரை பதிவிட்ட பின் ஒருமுறை கேன்சல் பட்டனை க்ளிக் செய்தாலே குறிப்பிட்ட பரிமாற்றம் ரத்தாகி விடும் என மனிபால் டெக்னாலஜிஸ் லிமிட்டெட் நிறுவன துணை தலைவர் அஸ்வின் ஷெனாய் தெரிவித்தார். முன்னதாக இதே தகவலை அமெரிக்காவை சேர்ந்த வலைதளம் ஒன்றும் பொய் என நிரூபித்து இருக்கிறது.



தற்சமயம் பரப்பப்படும் குறுந்தகவலில் நம்பகத்தன்மையை அதிகப்படுத்த, குறுந்தகவல் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது படிப்பவர்களை எளிதில் ஏமாற்றும் வகையில் அமைந்து இருக்கிறது. சமூக வலைதளங்களில் இதுபோன்று பல்வேறு போலி தகவல்கள் பரப்பப்படுகிறது.

இதனால் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம். இத்துடன் பரப்பப்படும் குறுந்தகவலை மேலும் உண்மையாக்கும் வகையில் வலைதள முகவரி ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. எனினும் இந்த வலைதளத்தில் முகப்பு பக்கம் மட்டும் திறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் இதுபோன்று எவ்வித குறுந்தகவல்களையும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில்லை. பெரும்பாலும் இதுபோன்ற குறுந்தகவல்களை குறிப்பிட்ட ஏ.டி.எம்.களை இயக்கும் வங்கிகள் சார்பில் அனுப்பப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
Tags:    

Similar News