செய்திகள்

ஜனாதிபதியை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மோடி

Published On 2019-05-25 09:57 GMT   |   Update On 2019-05-25 09:57 GMT
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது. பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததும், இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் மாலை 7 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



வரும் 30-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றபோது, விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News