செய்திகள்

மாணவிகளை பலாத்காரம் செய்து படுகொலை- குற்றவாளியின் வீட்டை கொளுத்திய பொதுமக்கள்

Published On 2019-04-30 13:31 GMT   |   Update On 2019-04-30 13:31 GMT
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை கிணற்றில் வீசி மறைத்த காமக் கொடூரனை போலீசார் கைது செய்தனர். அவனது வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். #TelenganaTwinMurders
ஐதராபாத்:

தெலங்கானாவின் யாதகிரி புவனகிரி மாவட்டம் ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமானார். அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் சிறுமியின் கைப்பை பாழடைந்த கிணறு ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றை ஆய்வு செய்தபோது, அதில் மாயமான சிறுமியின் உடல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கிணற்றின் உரிமையாளர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த பகுதியில் பேருந்து வசதி இல்லாத‌தால் மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள சீனிவாசன், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து உடலை மறைக்க பாழடைந்த கிணற்றினுள் வீசியுள்ளார். இதேபோன்று, கடந்த ஒரு மாத‌த்திற்கு முன் ஒரு இளம்பெண்ணையும் பலாத்காரம் செய்து உடலை கிணற்றினுள் வீசியதாக விசாரணையில் சீனிவாசன் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பெண்ணின் உடலும் கைப்பற்றப்பட்டது.



இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மற்றொரு கிணற்றில் சோதனையிட்டபோது, மேலும் ஒரு சிறுமியின் எலும்புகூடு கைப்பற்றப்பட்டது. இதேபோல கடந்த 4 ஆண்டுகளாக மேலும் சில பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சீனிவாசன் வீட்டை தீயிட்டு கொளுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீனிவாசனின் குடும்பத்தினர் ஏற்கனவே ஊரைவிட்டு சென்றுவிட்டதால் அவர்கள் உயிர்தப்பினர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர். மாவட்ட கலெக்டர் அந்த கிராமத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். #TelenganaTwinMurders
Tags:    

Similar News