கேரளாவில் சாலை சீரமைப்பின்போது பொக்லைன் எந்திரம் மீது பாறை விழுந்து தமிழக டிரைவர் பலி
கொழிஞ்சாம்பாறை:
கிருஷ்ணகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 30). பொக்லைன் ஆபரேட்டர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிக்கு சுனில்குமார் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதிக்கு சென்றார்.
மலைப்பகுதியான அங்கு ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையோரத்தில் உள்ள ஒரு பாறையை அகற்ற முயன்றார். அப்போது உயரத்தில் இருந்த மலையின் ஒரு பகுதி பெயர்ந்து ஜே.சி.பி. எந்திரத்தின் மீது விழுந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் கொண்டோட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நீண்ட நேரம் போராடியபோதும் மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுனில்குமாரை மீட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கொண்டோட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.