செய்திகள்
பத்ராவதி அருகே உள்ள டி.பி.ஹள்ளியில் உள்ள வீரபத்ரேஸ்வரா கோவில் மணியை பசுமாடு அடித்த காட்சி.

பத்ராவதி அருகே நள்ளிரவில் கோவில் மணியை அடித்த பசுமாடு

Published On 2019-04-27 02:03 GMT   |   Update On 2019-04-27 02:03 GMT
பத்ராவதி அருகே நள்ளிரவில் கோவில் மணியை பசுமாடு அடித்த வீ்டியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு :

பத்ராவதி அருகே நள்ளிரவில் கோவில் மணியை பசுமாடு அடித்த வீ்டியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ளது, டி.பி.ஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரபத்ரேஸ்வரா சுவாமி மற்றும் முக்தே சங்கமேஷ்வரா சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவில் ஒரு பசுமாடு கோவிலை நோக்கி வருகிறது. பின்னர் அந்த பசுமாடு கோவில் முன்பு கட்டியுள்ள மணியை தனது தலையால் முட்டி அடித்துவிட்டு, சில வினாடிக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது.

அந்த பசு மாடு, அதே பகுதியை சேர்ந்த மஞ்சப்பா என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:-

12-ம் நூற்றாண்டில் நலத்திட்ட புரட்சி நடந்த போது சரண தொம்பர சென்னம்மா என்பவர் எங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனால் எங்கள் கிராமத்திற்கு தொம்பர பைரனஹள்ளி என பெயர் வந்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இத்தகைய பெயர் பெற்ற எங்கள் ஊரில் வீரபத்ரேஸ்வரா சாமி ேகாவில் உள்ளது. இந்த கோவிலில் குறி கேட்டால் சரியாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் அவ்வப்போது கோவிலில் அதிசயங்களும் நடந்து வருகிறது. அதன்படி தான் தற்போது கோவில் மணியை பசுமாடு அடித்துள்ளது. இது தெய்வீக சக்தியால் மட்டுமே நடந்துள்ளது. இதனால் வீரபத்ரேஸ்வரா சாமி மீது இருந்த தெய்வீக பக்தி எங்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News