செய்திகள்

காக்கிநாடாவில் ஜெகன்மோகன் கூட்டத்தில் சாரம் சரிந்து பெண் பலி

Published On 2019-03-28 06:59 GMT   |   Update On 2019-03-28 06:59 GMT
காக்கிநாடாவில் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்ற கூட்டத்தில் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காக்கிநாடா:

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று அவர் காக்கிநாடாவில் உள்ள மாண்டபேட்ட பகுதியில் பிரசார கூட்டத்தில் பேசினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது ஒரு கட்டிடத்தில் இருந்த சாரம் சரிந்து கூட்டத்தினர் மீது விழுந்தது.

இதில் பலர் சிக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பில்லி ராமுலம்மா (60) என்ற பெண் இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜெகன்மோகன் ரெட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News