திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு - வாலிபர் கைது
திருப்பதி:
திருப்பதி அருகேயுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள பாக்ராப்பேட்டை, எர்ரவாரி பாளையம் என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு ரோந்து சென்றனர்.
அப்போது அடர்ந்த வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் கூறினர். ஆனால் செம்மர கடத்தல் கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தற்பாதுகாப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பயந்துபோன செம்மரக் கடத்தல் கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஜவ்வாதுமலை பாலாம்பட்டை சேர்ந்த செல்வராஜ் ( வயது 26) என தெரியவந்தது. செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல் கும்பல் விட்டு சென்ற 13 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். #RedSandalwood #Tirupati