செய்திகள்

டெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா

Published On 2019-02-22 10:42 GMT   |   Update On 2019-02-22 10:42 GMT
150 டன் அளவிலான திடக்கழிவுகளை கொண்டு டெல்லியில் 7 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட உலகின் 7 உலக அதிசயங்களின் மாதிரிகள் அமைந்துள்ள பூங்காவை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். #WondersoftheWorld #WondersoftheWorldPark #WondersoftheWorldinDelhi
புதுடெல்லி:

தெற்கு டெல்லி மாநகராட்சியின் சார்பில் தொழிற்சால திடக்கழிவுகள் மற்றும் இதர பொருட்களை கொண்டு உலகின் 7 உலக அதிசயங்களின் மாதிரிகள் இடம்பெறும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி நினைவகம் அருகே 7 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் உலகின் 7 அதிசயங்களின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன.

20 அடி உயரத்தில் தாஜ்மஹால், 18 அடி உயரத்தில் எகிப்து நாட்டில் உள்ள கிஸா பிரமிடு, 60 அடி உயரத்தில் ஈபிள் கோபுரம், 25  அடி உயரத்தில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம், 25 அடி உயரத்தில் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் உள்ள மீட்பர் இயேசுவின் சிலை, 15 அடி உயரத்தில் ரோம் நகரில் உள்ள கோலோசியம் அரங்கம், 30 அடி உயரத்தில் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவை இங்கு அமைந்துள்ளன.


சுமார் 7 கோடி ரூபாய் செலவில் ஆறே மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

விரைவில் ஒலி,ஒளி காட்சியும் இங்கு தொடங்கப்படும் நிலையில் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் சிறார்களுக்கு 25 ரூபாயும் தற்போது பார்வையாளர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலை 11 முதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கும் இந்த பூங்காவை சுற்றிப்பார்க்க  3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெற்கு டெல்லி மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #WondersoftheWorld #WondersoftheWorldPark #WondersoftheWorldinDelhi
Tags:    

Similar News