செய்திகள்
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் பலி 70 ஆக உயர்ந்தது
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 70 ஆக உயர்ந்துள்ளது. #UttarakandIllicitliquor #UPIllicitliquor
டேராடூன்:
உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணைபோன உள்ளூர் அதிகாரிகள் 13 பேரை ஹரித்துவார் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று மாலை நிலவரப்படி ஹரித்துவார் மாவட்டத்தை சேர்ந்த 24 பேரும், உத்தரபிரதேசம் மாநிலம், சஹரான்பூர் எல்லைப்பகுதி வழியாக இங்கு வந்து கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சென்ற 46 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UttarakandIllicitliquor #UPIllicitliquor