செய்திகள்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ஓராண்டு அவகாசம் வேண்டும் - கண்காணிப்பு குழு தகவல்

Published On 2019-01-25 07:02 GMT   |   Update On 2019-01-25 07:02 GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ஓராண்டு அவகாசம் வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் கண்காணிப்பு குழு தகவல் தெரிவித்துள்ளது. #Sabarimala #SC
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களிடமும் கெடுபிடி காட்டப்பட்டது.



இதுபற்றி ஐயப்ப பக்தர்கள் கேரள ஐகோர்ட்டில் முறையிட்டனர். அவர்களின் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதை கண்காணிக்க உயர்நிலை குழு ஒன்றை நியமித்தது.

ஐகோர்ட்டு நியமித்த உயர்நிலை கண்காணிப்பு குழு சபரிமலையில் ஆய்வு செய்தது. இது தொடர்பான அறிக்கையையும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், மாநில அரசு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துள்ளதாக கூறி இருந்தது.

இப்போது மீண்டும் ஒரு அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க ஓராண்டு அவகாசம் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

அவகாசம் கோருவதற்கான காரணமும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், சபரிமலை பெருவழிப் பாதையில் பெண்கள் செல்ல வசதிகளை அரசு மேற்கொள்ள வேண்டும், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும்.

கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பம்பையில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைத்து அங்கு பெண் பக்தர்களுக்கான வசதிகள் செய்ய வேண்டும். இதற்கு ஓராண்டு காலம் ஆகும். அதுவரை சபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் வேண்டுமென்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Sabarimala #SC
Tags:    

Similar News