காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் முட்டாள்கள் - சந்திரசேகரராவ் சொல்கிறார்
ஐதராபாத்:
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பஞ்சாயத்துராஜ் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்சம் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி முட்டாள்கள் போன்று பேசி வருகிறார்கள்.
எனது அரசு பஞ்சாயத்து தேர்தலில் 61.13 சதவீத இட ஒதுக்கீடு அளித்த புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் ஸ்வப்னாரெட்டி, கோபால் ரெட்டி ஐகோர்ட்டை நாடினர்.
இட ஒதுக்கீடுக்கு ஐகோர்ட்டு தடை விதித்ததால் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படிதான் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளோம்.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஜனவரி 10-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும். இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி நன்கு தெரியாமல் காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை ஆராய்ந்தால் முட்டாள் தனமாக இருக்கும்.
அவர்கள் முட்டாள் தனத்தை வெளிக்காட்டுவதால் காங்கிரஸ் தலைவர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறோம்.
சந்திரபாபுநாயுடு இந்தியாவிலேயே மோசமான அரசியல்வாதி. அவர் அரசியல் மேனேஜர். தலைவர்அல்ல. எனது கட்சி எப்போதுமே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க ஆதரவு தெரிவிக்கும்.
ஆனால் இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை அரசியல் காரணங்களுக்காக மாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrasekharRao