அசாமில் 1 கிலோ எலிக்கறி ரூ.200க்கு விற்பனை
கவுகாத்தி:
அசாம் மாநிலம் பக்சா மாவட்டம் குமரிகட்டா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். இங்கு எலிக்கறி விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கோழிகறி, பன்றி கறியை விட எலிக்கறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
நெல் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை விவசாயிகள் பொறி வைத்து பிடிக்கிறார்கள். இந்த எலிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி வாரச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.
புதிதாக பிடிக்கப்பட்ட எலிகளுடன் தோல் உரிக்கப்பட்ட எலிக்கறி, வேக வைக்கப்பட்ட எலிக்கறி விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ எலிக்கறி ரூ.200க்கு விறக்கப்படுகிறது.
பழங்குடி மக்களுக்கு எலிகள் நல்ல வருமானம் தரும் தொழிலாக உள்ளது. தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் அவர்கள் குளிர் காலத்தில் வேலை இல்லாதபோது எலிகளை பிடித்து விற்று வருமானம் தேடிக் கொள்கிறார்கள்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக வயல்வெளிகளில் எலிகள் அதிகமாகி வருகின்றன. அவைகள் பயிர்களை நாசம் செய்வதால் பொறி வைத்து பிடிக்கிறோம். பின்னர் வியாபாரிகளிடம் விற்று விடுகிறோம்” என்றார். #ratmeat