செய்திகள்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு- மாயாவதி அறிவிப்பு

Published On 2018-12-12 05:46 GMT   |   Update On 2018-12-12 06:08 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். #MadhyaPradeshElections2018 #Mayawati #BSPSupportCongress
இந்தூர்:

மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மெஜாரிட்டியை நெருங்கிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

“மக்கள் பாஜகவுக்கு எதிராக இருப்பதையே சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.  காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பலவற்றில் எங்களுக்கு உடன்பாடு இல்லாதபோதிலும், மத்திய பிரதேசத்தில் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க ஒப்புக்கொண்டோம். தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்” என்று மாயாவதி கூறினார்.

இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் இன்று மதியம் அவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர். #MadhyaPradeshElections2018 #Mayawati #BSPSupportCongress
Tags:    

Similar News