கொல்கத்தா விமானத்தை கடத்தி தகர்க்க போவதாக மிரட்டல் - வாலிபர் கைது
கொல்கத்தா:
கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை 8.15 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.
அப்போது இருக்கையில் அமர்ந்து இருந்த வாலிபர் ஒருவர் செல்போனில் பேசினார். நடுவானில் பறக்கும் போது இந்த விமானத்தை கடத்தி தகர்க்க போவதாகவும், பயணிகள் அனைவரையும் கொல்ல போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
இதை அவர் அருகில் இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் கேட்டனர். அந்த வாலிபர் தனது முகத்தை துணியால் மறைத்து கட்டி இருந்தார்.
இதனால் அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என கருதிய பயணிகள் விமானியிடமும், ஊழியர்களிடமும் தெரிவித்தனர். அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறினர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஜெ பொத்தார் என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவத்தால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #PlaneHijackThreat