5 மாநில சட்டசபை தேர்தல் - 25 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்
ராய்ப்பூர்:
சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் சத்தீஷ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. 2-வது கட்டமாக 72 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
மத்தியபிரதேசம், மிசோரமில் ஒரேகட்டமாக 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானாவில் ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 11-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். முக்கிய தலைவர்கள் முகாமிட்டு உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த வரிசையில் பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சத்தீஸ்கரில் அவர் நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடி மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 25 பொதுக்கூட்டத்தில் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை பா.ஜனதா மேலிடம் வெளியிடவில்லை.#PMModi #AssemblyElections