செய்திகள்

ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் - மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சனம்

Published On 2018-09-20 22:06 GMT   |   Update On 2018-09-20 22:06 GMT
ரபேல் போர் விமான விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார். #ArunJaitley #RahulGandhi
புதுடெல்லி :

பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் - பா.ஜனதா இடையே நீண்ட வாக்குவாதம் நீடித்து வருகிறது.

சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற தகுதித்திறனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் முன்னாள் தலைவரான டி.எஸ். ராஜூ, ரபேல் போர் விமானத்தை இந்தியாவிலேயே மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்க முடியும். அதற்கான தகுதித்திறன், எங்களுக்கு இருந்தது என கூறினார்.

இதன் பின்னர் நிர்மலா சீதாராமன் மீண்டும் ராகுல் தாக்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஊழலை பாதுகாக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள ரபேல் மந்திரி (நிர்மலா சீதாராமன்) பொய் சொல்லி இப்போது சிக்கிக்கொண்டார்.

ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற திறன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கிடையாது என்ற அவருடைய கூற்றை  அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜூ மறுத்துள்ளார். எனவே அவரது நிலை ஏற்கத்தக்கது அல்ல. அவர் பதவி விலக வேண்டும்’ என்றார்.



இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்வதாகவும், அவர் ஒரு கோமாளி இளவரசர் என்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
 
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறியது அனைத்தும் முதல் பொய்யாகும். 15 தொழில் அதிபர்களுக்கு மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ததாக கூறுவது 2 வது பொய்யாகும். முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட பொய்களை கூறிவரும் ஒருவர் பொதுவாழ்வுக்கு தகுதியற்றவர் என கருதப்படுவார்.

பொய்களை கூறி சூழலை மாசுபடுத்தும் ஒரு கோமாளி இளவரசரை பொது சொற்பொழிவுகள் ஆற்ற அனுமதிக்கலாமா? என்பது குறித்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #ArunJaitley #RahulGandhi
Tags:    

Similar News