செய்திகள்

தன் மீதான களங்கம் நீங்கியதை அறியாமலேயே உயிரிழந்த இஸ்ரோ விஞ்ஞானி

Published On 2018-09-18 18:39 GMT   |   Update On 2018-09-19 02:09 GMT
இஸ்ரோவில் உளவு பார்த்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தீர்ப்பு வந்ததை அறியாமலேயே விஞ்ஞானி சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #ScientistKChandrasekhar
திருவனந்தபுரம்:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், கே.சந்திரசேகர். இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை 1994-ம் ஆண்டு விஞ்ஞானிகள் நம்பி நாராயணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொண்ட கேரள மாநில போலீசார் அவர்களை கைது செய்தது.

பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என சந்திரசேகர் மற்றும் நம்பி நாராயணன் போன்றோரை சிபிஐ விடுதலை செய்தது. மேலும் கேரள போலீஸ் அதிகாரிகள் சட்டவிரோதமாக அவர்களை கைது செய்ததாகவும் கூறியது.

இதற்கிடையே, தன்னை தேவையின்றி கைது செய்து, சித்ரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நம்பி நாராயணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து 1998-ல் நம்பி நாராயணன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நம்பி நாராயணன் உள்ளிடோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது என கூறி மனரீதியாக துன்புறுத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு கேரள அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேல்முறையீட்டு வழக்கை மிகவும் எதிர்ப்பார்த்திருந்த சந்திரசேகர் தீர்ப்பு வெளியான தினமான கடந்த வெள்ளி அன்று காலையில் திடீரென கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர் கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்தார்.

இது தொடர்பாக அவர் மனைவி விஜயம்மா கூறுகையில், ’தீர்ப்பு வெளியான அன்று அவர் திடீரென கோமா நிலைக்கு சென்றார். தீர்ப்பில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால் இந்த வழக்கு தொடரப்பட்டதற்கான பின்னனி அறிந்து கொள்ளாமல் அவர் மறைந்து விட்டார். இந்த வழக்கினால் நாங்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானோம்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இஸ்ரோவில் உளவு பார்த்ததாக தன் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்கியதை அறியாமலேயே விஞ்ஞானி சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #ScientistKChandrasekhar
Tags:    

Similar News