செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் - தினகரன் பேட்டி

Published On 2018-09-05 04:40 GMT   |   Update On 2018-09-05 04:40 GMT
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று தினகரன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Parliamentelection #Sasikala #Dinakaran

பெங்களூர்:

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலவை சந்தித்த பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சசிகலாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சசிகலாவை நேரில் சந்தித்து பேசினேன். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரிஇல்லை என்று வெளியான தகவல் வெறும் வதந்திதான்.

தமிழகத்தில் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் விதமாக சோபியாவின் கைது சம்பவம் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுவாழ்க்கையில் ஈடுபடும் தலைவர்களுக்கு சகிப்புதன்மை கட்டாயமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் கருத்து ஏற்கதகுந்த வகையில் இல்லை. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் அணுகுமுறை மிகவும் தவறானது. மத்தியிலும் எங்கள் ஆட்சி, மாநிலத்திலும் எங்கள் கிளை ஆட்சி என்ற ஆணவ போக்கு இதில் தெரிகிறது.

 


பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சிதான் அமையும். தமிழக எம்.பி.க்கள் ஆதரவை பெற்றுதான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்துதான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும்.

தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட்கூட வாங்காது. விரைவில் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வந்து விடும். ஆயிரம் தினகரன் வந்தாலும் சமாளிப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். முதலில் என்னை ஆட்சியாளர்களால் சமாளிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #Sasikala #Dinakaran

Tags:    

Similar News